ஒற்றை விழி பார்வையில்
என் நித்திரை கிழிக்கிறாள்....
குறும்புக் குறு நகையில் - என்னை
குத்திக் குடிக்கிறாள்!
குட்டி கன்னங்களில்
குழி விழும் சிரிப்பினில்...
சிதைந்த என்னை தேடி தேடி தேடி நான்....
காற்றில் பரவும் கற்றை முடியில்
என் என் உதிரம் சுடும் ஒற்றை நிலா
பாதி முகம் காட்டி - என்
ஆதி வரை ஆளுகின்றாய்....
மீதி முகமும் காட்டி - என்னை
மீட்டுக் கொடு...!
உன்னை கைப்பிடிக்கும்
காதலனாய் இல்லாமல் போனாலும்...
காவலனாய் கூட வர
கூடிடுமோ ஓர் வரம்....
உன் புன்னகை கண்டுவிட
கன்னத்தை தொட்டு விட
கார்குழலில் விளையாட
காற்றாய் தான் நானிருப்பேன்...
காலமெல்லாம் காத்திருப்பேன்...!
உன்னோடு நானிருந்து
உயிரில் களித்திருப்பேன்!
உன் மூச்சாய் உயிர் தொட்டு...
என் உயிரை காத்திருப்பேன்!
என்றாவது ஒருநாள்
என் நினைப்பு வந்தால்....
ஆழப்பெரு மூச்சை அரை நொடி நிறுத்தி
கண் மூடு கண நேரம்....
இதயத்தின் ஓசையாய் - என்
காதலும் ஒலித்திருக்கும்!
கவிதை ஆக்கம் : சுந்தர இராசசேகரன்
அசத்தல்👌👌👌👌👌
ReplyDelete